நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியாவை அபிமன்யு உடன் ஒப்பிட்டு பேசிய அவர், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர்.
நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய ராகுல் காந்தி: கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் இருப்பது தெரிய வந்தது. அதாவது, தாமரை வடிவிலானது என்பது தெரிந்தது. சக்கர வியூகம் என்பது தாமரை வடிவில் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய ‘சக்கரவியூகம்’ உருவாகி இருக்கிறது.
அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மார்பில் அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கும் நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சிக்கியுள்ளனர்.
இன்றும் சக்கர வியூகத்தில் ஆறு பேர் உள்ளனர். இன்றும் ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி கட்டுப்படுத்தி வருகிறார்கள்” என்றார்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவைக் கைப்பற்றியுள்ள சக்கர வியூகத்திற்கு பின்னால் 3 படைகள் உள்ளன. 1) ஏகபோக முதலாளித்துவம். இந்தியச் செல்வம் முழுவதையும் 2 பேர் சொந்தமாக்க அனுமதிக்கிறது.
எனவே, சக்கர வியூகத்தின் ஒரு அம்சம் நிதி அதிகார குவியலால் வருகிறது. 2) இந்த நாட்டின் நிறுவனங்கள், ஏஜென்சிகள், CBI, ED, IT, 3) அரசியல் நிர்வாகிகள். இந்த மூன்றும் சேர்ந்து, சக்கர வியூகத்தின் மையமாக உள்ளனர். அவை இந்த நாட்டை சீரழித்துவிட்டன” என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளரும், தேசிய செயலாளர் திரு வைசாக், திருமதி சாகரிக்கா ராவ், துணைத் தலைவர் திரு சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் திரு அஸ்வத்தாமன், மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மம்தா; “கூட்டத்தில் எனக்கு பேசுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக முதல்வர் x பதிவில்; கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் கூட்டாட்சியா?? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியினரை எதிரிகளாக நினைத்து ஒடுக்க நினைக்கக் கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கூட்டாட்சிகளில் தத்துவம் என்று அவர் தனது x தளத்தில் கேள்விகளுடன் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லை. வெள்ள பாதிப்பு நிவாரணம், மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி என தமிழ்நாடு எம்.பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சுத்தமாக ஓரங்கட்டியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் இந்த பாரபட்சமான செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் வருகிற ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அதேபோல, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்களும் தொடர்ந்து புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூ.59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூ.12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக் காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக ரூ.1992 கோடி ஜி.எஸ்.டி. தொகை வழங்கிய பீகார் மாநிலத்திற்கு வழங்கிய தொகை ரூ.59,000 கோடி. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக கேட்ட தொகை ரூ.37,000 கோடி. ஆனால் வழங்கியதோ ரூ.276 கோடி.
அதேநேரத்தில் பீகாருக்கு வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தோடு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தாம்பரம் – செங்கல்பட்டு விரைவு மேம்பால திட்டத்திற்கும் ஒப்புதலும், நிதியும் தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், தமிழகத்தை வஞ்சிப்பத்தை நோக்கமாகக் கொண்டு காழ்ப்புணர்ச்சியோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டணி அமைத்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறார்கள். இத்தகைய தமிழக விரோத போக்கை அரசியல் பேராண்மையோடு தமிழக முதலமைச்சர் எதிர்த்து கண்டன குரல் எழுப்பியிருப்பதை வரவேற்கிறேன். இத்தகைய போக்கு கூட்டாட்சி அமைப்பிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டு விட்டன. ஆனால், கடந்த 2019, ஜனவரியில் மதுரை தோப்பூரில் ரூ.2600 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பியதை தவிர ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கிற பிரதமர் மோடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு நடத்துவதை விட அப்பட்டமான தமிழக விரோத போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.
கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் என அனைத்திலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் புறக்கணித்ததை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து வருகிறது. பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், காங்கிரஸ் முன்னோடிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள்- முன்னாள் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை : கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்,”என்றார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று (ஜூலை 25) வருகை புரிந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அப்துல்லா பின் தௌக் அல்மரியிடம் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சித் துறை ஆணையரும், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஐக்கிய அமீரக தூதரகத்தின் உயர் அலுவலர்கள், பன்னாட்டு தொழில் குழுமத்தின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக அப்துல்லா பின் தௌக் அல்மரி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நேற்று (ஜூலை 24) காலை பெசன்ட் நகரில் உள்ள ஹேல்த் வாக் (8 கிமி) நடைபயிற்சி பாதையில் நடை மற்றும் ஓட்டப் பயிற்சியினை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மழைக்காலம் வந்ததும் டெங்குவும் உடன் வந்துவிடும். எங்குப்பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும்.
அந்தவகையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அதிகளவு டெங்கு பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொசுவால் ஏற்படும் இந்த டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்புவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாது என்றாலும், மக்களை மிகவும் பாதிக்கும்.
இந்த காலங்களில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களுக்கு பெரியளவு சிரமம் ஏற்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில்தான் எப்போதும் அதிகளவு டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆனால், தற்போது தமிழகம் முழுவதுமே அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை சென்னையில் தொடங்கி வைத்த பிறகு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “இந்த ஆண்டு 6565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
மேலும் தமிழகம் முழுவதும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளும் மருத்துவமனைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டுவிட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் தென்படுகின்றன. ஆகையால் மக்களும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு, நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக் கொள்ளுதல் அவசியம்.