
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரங்கேற்றப்பட்டு வரும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார் .
இதன் தொடர்ச்சியாக மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில் இன்று அரங்கேற்றப்பட்டது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இதனை கலை பண்பாட்டுத்துறை மூலம் ஓவிஎம் தியேட்டர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியது . இதில் 62 கலைஞர்கள் பங்கேற்றனர்.ஆங்கிலேயர்களுடனான போராட்டத்தில் ஜான்சி ராணி தோற்றார், ஆனால் வேலு நாச்சியார் வெற்றி கண்டார். அவரது மறைக்கப்பட்ட வரலாறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறோம் என்ற வகையில் நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த நாடகத்தை அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

பின்னர் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து, வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தின் இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இந்த நிகழ்வில் எம் எல் ஏக்கள் பூமிநாதன்,வெங்கடேசன், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த்,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்,மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொன்முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.