
கோயம்புத்தூரில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்ய மாநில அரசு டெண்டர் விடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேம்பாட்டிற்கான டிபிஆர் தயாரிப்பதற்கும் வடிவமைப்பு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கும் டெண்டர் முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்நிலை விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அமைய போகும் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். ஏலதாரர்கள் ஒரு மாதத்திற்குள் ஏலத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சேலத்தையும் கொச்சியையும் இணைக்கும் NH 544 இல் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில சிறைத்துறையிடம் 200 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் 198 ஏக்கர் டிபிஆர் தயாரிப்பு முடிந்ததும் மைதானத்திற்காக கையகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறையானது நாட்டிலேயே மிகப்பெரிய பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த அரங்கத்தை நிர்மாணிக்க உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை விட பெரிய மைதானமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் இதை கட்ட உள்ளனர்.
உறுப்பினர்கள் இருக்க நவீன ஹோட்டல் அறைகள், விஐபி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறைகள், அதிநவீன வீரர்களின் ஓய்வறை, ஊடகம் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றுக்கான ஐந்து நட்சத்திர வசதிகளைக் கொண்டிருக்கும் அறைகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவகங்கள், காட்சியகங்கள் மற்றும் கிரிக்கெட் அருங்காட்சியகம். உட்புற பயிற்சி அரங்கம், சிறப்பு உள்ளரங்க பீல்டிங் மண்டலம், பிட்ச் க்யூரேஷன் பயிற்சி, விரிவுரை அரங்குகள் மற்றும் உயர் செயல்திறன் மையம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
வீரர்களின் வசதிக்காக தனியாக உணவகம், ஸ்பா, தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என்று அசத்தலான திட்டங்களை வழங்கும்படி யோசனைகளை தமிழ்நாடு அரசு வரவேற்று உள்ளது. சமீபத்தில் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு முக்கியமான பணியையும் மேற்கொண்டுள்ளார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளையும் தொடங்கினார்.
இங்கே அமைய உள்ள மைதானத்தில் கிளப்ஹவுஸ், ஸ்போர்ட்ஸ் பார் மற்றும் உணவகம் ஆகியவையும் கட்டுமான திட்டத்தில் உள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தையும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தையும் நேரடி கேஸ் ஸ்டடிகளாக சிபாரிசு செய்து அதைவிட பிரம்மாண்டமாக, லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் போல கலைநயத்தோடு கட்ட முடிவு செய்துள்ளனர்.
வீரர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கான இடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன. உயர் தரமான இருக்கை வசதி தொடங்கி பல நவீன வசதிகள் இங்கே வர உள்ளன. தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.