கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்!
சென்னை: கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. கொரோனாவுக்கு நாட்டில் இதுவரை 10 பேர் பலியாகி இருந்தனர். 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். காட்டுத் தீயாக கொரோனா பரவுவதால் இதை தடுக்க நாடு முழுவதும் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கான லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது.
21 நாட்களுக்கு நாடு முடக்கப்படும் என்கிற அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்டார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, 21 நாட்கள் பொதுமக்கள் வெளியே வருவதையே மறந்துவிட வேண்டும் என்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவுக்காக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார்.
கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.. பிரதமர்
மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர் வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் செல்லாதவர் என்றும் கடுமையான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் அவர் உயிரிழந்தார் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.